கல்விக்கும் சமூகவியலுக்கும் இடையிலான இடைத்தொடர்பு



கல்விக்கும் சமூகவியலுக்கும் இடையிலான இடைத்தொடர்பு 




கல்வி - கல்வி என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல் “Education” என்பதாகும். இச்சொல் “Educatio” என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இந்த Educatio என்ற சொல் வளர்த்தல், வெளிக்கொணரல் ,உயர்த்திவிடல், முன்னேற்றிவிடல் போன்ற பொருள்களைக் கொண்டுள்ளது. எனவே கல்வி என்பது தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணருவது ஆகும்.

சமூகவியல் - சமூகவியல் என்ற சொல்லுக்கான ஆங்கிலச்சொல் “Sociology” என்பதாகும் “ஒருவர் இன்னொருவருடன் கொள்ளும் தொடர்பு” என்ற பொருளைக் கொண்ட “Socius” என்ற இலத்தீன் சொல்லிலிருந்தும் “அறிவு” என்ற கருத்தைக் கொண்ட  "ology" என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் பெறப்பட்டது ஆகும். எனவே, சமூகவியல் என்பது மனித சமூகம், சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூகக் கட்டமைப்பு, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிவியல் நோக்கில் ஆராயும் இயல் ஆகும்.

கல்வியும் சமூகவியலும்

கல்வியும் சமூகவியலும் வெவ்வேறான விடயங்கள் அல்ல. அறிவின் இரு கிளைகளாக கல்வியும் சமூகவியலும் காணப்படுவதோடு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட சமூகத்தின் முன்னேற்றம் கல்வியிலும் கல்வியின் முன்னேற்றம் குறிப்பிட்ட சமூகத்திலும் தங்கியுள்ளது. கல்வி என்பது குழந்தைகளை உடல் மற்றும் மனவெழுச்சி வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கத்துடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்களின் கூற்றுப்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழிநடாத்துவதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தான் கற்றுக் கொள்கின்ற விடயங்களையும் பெற்ற அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு தங்களது திறன்களை உச்ச அளவில் வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு கருவியே சமூகமாகும்.

சமூகவியலுக்கு அடிப்படையாக இருப்பது சமூகத்தில் உள்ள தனிமனிதன் ஆவான். சமூகத்தில் ஒரு ஆற்றல்மிக்க உறுப்பினராக விளங்க வேண்டுமானால் சமூக மதிப்புகள், குறிக்கோள்கள், நம்பிக்கை, விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை விதைக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு தனி மனிதனும் திறமை வாய்ந்த மனிதனாக வளர கல்வி மிகவும் அவசியம். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் கல்வியும், கல்வி முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் அங்கு காணப்படும் சமூகமும் அடிப்படையான காரணங்களாகக் காணப்படுகிறது. இதிலிருந்து கல்விக்கும் சமூகவியலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை அறிந்து கொள்ளலாம். கல்விக்கும் சமூகத்துக்குமான தொடர்புகள் விரிவடையும்போது கல்விச் சமூகவியல் தோற்றம் பெறத் தொடங்கியது.

கல்விச் சமூகவியல்

19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் கல்வியானது சமூக நோக்கில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனை ஜேர்மனியில் முனைப்புப் பெற்றது. கல்விக்கும் சமூகத்துக்கும் உள்ள தொடர்புகளை விஞ்ஞான முறையிலும் உடன்பாடான முறையிலும் எடுத்துக்காட்டும் அணுகுமுறைகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் தோன்றின.

சமூகவியலின் தந்தையான “ஓகஸ்ட் கொம்ட்” சமூகவியலை தனியான ஒரு துறையாக அறிமுகப்படுத்திய காலத்தில் அதன் முக்கிய எண்ணக்கரு சமூக முன்னேற்றமாக இருந்தது. கல்வியும் சமூக முன்னேற்றத்துடன் தெளிவான தொடர்புகளைக் கொண்டிருந்ததால் கல்வியின் சமூகத் தொழிற்பாடுகள் சமூகவியலாளர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தது. இந்த வகையில் ஓகஸ்ட் கொம்ட் உடன் ஸ்பென்சர், எமில் துர்க்கைம் ஆகியோரும் முக்கியம் பெறுகின்றனர். இவர்களுள் எமில் துர்க்கைம் கல்வியில் விஞ்ஞானம் பற்றிக் கூறுகையில், கல்விச் சமூகவியலானது கல்வியின் சமூகம் சார்ந்த இயல்புகளை விஞ்ஞான ரீதியாக வரையறை செய்ததுடன் கல்வியானது இளந்தலைமுறையினரை முறைப்படி சமூக மயப்படுத்துகிறது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கல்விச் சமூகவியல் என்னும் சொற்றொடரை முதன் முதலாக டாக்டர் ஜே .எம். கில்லட் என்பவர் பயன்படுத்தினார். ஒட்டாவா என்பவரது வரைவிலக்கணத்தின் படி, “கல்வி ஒரு செயல்முறை என்ற எடுகோலுடன்ஆரம்பித்து அது சமூகத்தினுள் சென்றடையும் பொழுது கல்வியின் இயல்புகளை சமூகம் தீர்மானிக்கிறது என்னும் அடிப்படையில் சமூகவியல் கோட்பாடுகளின் விளைதிறனும் செயற்றிறனும் பிரயோகத் தன்மையும் கொண்ட இயலே கல்விச் சமூகவியல் எனக் குறிப்பிடுகின்றார்.

கல்விச் செயல்முறை ஒரு சமூக செயலாகும் என்பது கல்விச் சமூகவியலின் அடிப்படைக் கருத்தாகும். சமூகவியலின் விதிகளையும் முறைகளையும் பல கல்விப் பிரச்சினைகளுக்கு விடை காண்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஸ்மித் விளக்கம் தருகிறார். கல்விக்கூடங்கள் சமூக நிலையங்கள் ஆகும் சமுதாயத்தின் தொழில்களில் கல்வி புகட்டுதல் ஒன்றாகும். கல்வியினால் சமூகம் பெரும் பயன்களையும் இவற்றை முழுமையாக அடையும் வழி வகைகளையும் கல்விச் சமூகவியல் எடுத்துக்காட்டுகின்றது. கல்விச் சமூகவியல் மாணவர்களை முழுமையான சமூக இயல்பு பெற்றவர்களாக உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

 கல்விச் சமூகவியலின் நோக்கங்கள்

  • கல்விக்கும் சமூகத்திற்கும் உள்ள இடைத் தொடர்பினை ஆராய்தல்.
  • கல்வியின் மீது சமூகம் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிதல். 
  • சமுதாயத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றல்.
  • பாடசாலைக்கும் பிற சமூகங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பினை உருவாக்கல்.
  • சமுதாயத்தில் இன்று காணப்படும் பல்வேறு போக்குகளை ஆராய்ந்து தனி மனிதர்களையும் பாடசாலைகளையும் இவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை தெளிவாக்கல்.

கல்விக்கும் சமூகவியலுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய வாத விவாதங்கள்

  • சமூகவியல் சமூக விஞ்ஞான கற்கை நெறி. சமூகத்தின் ஒழுங்குமுறைத் தன்மையின் அம்சங்களே கல்வி. 
  • சமூகவியல் சமூகத்தின் கட்டமைப்பு ,செயற்பாடுகளைக் கூறும் அதேவேளை சமூகத்தின் முக்கிய கட்டமைப்பை கல்வி கொண்டுள்ளது.
  • சமூகவியலின் முதன்மை எண்ணக்கருவானது சமூகமயப்படுத்தப்பட்ட தனிநபர்களை உருவாக்குதல் ஆகும். இதனையே கல்வி தனது செயற்பாடாக மேற்கொள்கிறது. 
  • கல்வியானது சமூகவியலின் நோக்கங்களை அடையும் இலக்கினைக் கொண்டுள்ளது. 
  • சமூகவியலின் ஆய்வுகூடம் கல்வியாகும். 
  • சமூகவியலானது திட்டமிடல், ஒழுங்கமைத்தல், மேற்பார்வை செய்தல், மதிப்பிடுதல் போன்ற கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. 
  • நவீன சமூகத்தில் தகவல் தளங்களை சமூகவியல் உருவாக்குவதோடு அவை கல்வியால் நுகரப்படுகின்றன.
  •  சமூகப் பெறுமானங்கள் கல்வியின் வெளிப்பாடு ஆகும். 
  • கல்வி சமூகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்கிறது. 
  • கல்வி சமூகத்திலே மாற்றங்களையும் மாறுதல்களையும் கொண்டு வருகிறது.
மேற்குறிப்பிட்ட விடயங்களிலிருந்து கல்விக்கும் சமூகவியலுக்கும் இடையிலான உறவு நிலை எவ்வாறானது என்றும் கல்வியும் சமூகவியலும் இணைவதன் மூலம் கல்விச் சமூகவியலின் தோற்றம் பற்றியும் தெளிவாக விளங்கக் கூடியதாக உள்ளது.


Abdhul Hadhy Fathima Yumna
Department of Education and Child care,
Eastern University, Srilanka.

Comments